இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள் நடிக்கும் ஒரு சுயாதீன (இண்டிபெண்டன்ட்) திரைப்படத்தின் படப்பிடிப்பை அவர் நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகு, படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் முழுநீள கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாபாத்திரத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சி, நடன மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான ‘ரியல் ஸ்டார்’ உபேந்திரா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

