தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், திரையுலகைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் முன்மாதிரி தம்பதியாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யா – ஜோதிகா தம்பதி தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதையொட்டி, தங்களது மகன் தேவ் மற்றும் மகள் தியா முன்னிலையில் இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “எங்களின் 20 ஆண்டு கால காதலையும், சண்டைகளையும் கொண்டாடும் திருமண உறுதிமொழி ஏற்பு இது. குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல; எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம் இது. நிஜத்திற்கு வெகுதூரம் இருப்பதாக நினைத்த ஒரு கனவு, இப்போது என் வாழ்நாள் முழுவதும் நான் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருக்கிறது. என்ன ஒரு முரண்?” என்றும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தங்களது திருமண வாழ்க்கையின் புதிய உறுதிமொழிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சூர்யா – ஜோதிகா இருவரும் 1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் சந்தித்தனர். பின்னர் ‘காக்க காக்க’ படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் கடைசியாக ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
View this post on Instagram

