Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

Karuppu Completes 100 Days - Suriya & RJ Balaji Thank Fans for the Blockbuster Success

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

‘கருப்பு’ 100 நாட்களை நிறைவு செய்ததையடுத்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கண்ணுங்களா… செல்லங்களா… சாமிகளா… என் சாமிகளா! ‘கருப்பு’ திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள். இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநரும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஆர்.ஜே. பாலாஜியும், “ஒரு தேவதைக் கதைப் பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. வெவ்வேறு நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், தலைமுறைகள் என அனைவரின் இதயங்களிலும் ‘கருப்பு’ ஆழமாகப் பதிந்துள்ளது. இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர். இதைவிடச் சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45-வது படமாக வெளியான ‘கருப்பு’, வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.120 கோடியையும், எட்டு நாட்களில் ரூ.200 கோடியையும் கடந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து ‘ஜெனரேஷனல் பிளாக்பஸ்டர்’ என பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரு நேர்மையான வழக்கறிஞரின் உடலுக்குள் ‘வேட்டை கருப்பு’ என்ற காவல் தெய்வம் புகுந்து, நீதிமன்றத்திலேயே அமானுஷ்ய சக்தியுடன் நீதியை நிலைநாட்டும் கதைக்களம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சாய் அபயங்கரின் பின்னணி இசையும், ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.