விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ஹிருதயம்’, ‘குஷி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஹேசம் அப்துல் வகாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசிய உருக்கமான பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அதிதி ஷங்கர், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கடினமான காலகட்டம் வரும். அப்படியொரு சூழ்நிலையில் நானும் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘ஒன்ஸ்மோர்’. இந்தக் கதையை கேட்டதும் எனக்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. அந்த இடிந்த நிலையில் இருந்து என்னை மீட்டெடுத்தது இந்தப் படம்தான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து அர்ஜுன் தாஸ் குறித்து பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தீவிர ரசிகையாக இருந்து அவரை நேரில் சந்தித்ததாகவும், இன்று அவருடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ரசிகர்களை கவரும் அழகான ‘லவ்வர் பாய்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அதிதி ஷங்கர் தெரிவித்தார். அவரது வித்தியாசமான கதாபாத்திரத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்றும், அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காதல் மற்றும் எமோஷன்களை மையமாகக் கொண்ட ரொமாண்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’, அதிதி ஷங்கரின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

