Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Kareena Kapoor Pregnant with Her 3rd Child

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை திரும்பினர். இதனிடையே, கரீனா கபூர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு அவரது குடும்பத்தினரும், மேலாண்மைக் குழுவினரும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திலிருந்து கரீனா கபூர் வெளியே வந்தபோது, அவரை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து மறைப்பதற்காக பாதுகாவலர்கள் குடை பிடித்தபடி அழைத்துச் சென்றனர். மேலும், அவர் அணிந்திருந்த உடையில் வயிற்றுப் பகுதி சற்று பெரிதாகத் தெரிந்ததாக கூறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, கரீனா தனது ‘பேபி பம்ப்’பை மறைக்கவே குடை பயன்படுத்தப்பட்டதாகவும், அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்நிலையில், இந்தத் தகவல்களை மறுத்துள்ள கரீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது மேலாண்மைக் குழுவினர், “கரீனா கபூர் கர்ப்பமாக இல்லை. பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை” என தெரிவித்துள்ளனர். மேலும், விடுமுறைப் பயணத்தின்போது சாப்பிட்ட உணவுகளால் அவர் சற்று பருமனாகத் தெரிந்திருக்கலாம் எனவும் நகைச்சுவையாக விளக்கமளித்துள்ளனர்.

சயீஃப் அலி கானின் சகோதரி சபா பட்டோடியும் இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் “வாழ விடுங்கள்” எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகை அலங்கார நிபுணர் மிடேஷ் ரஜானி தனது வயிற்றைப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் சிரிக்கும் மற்றும் பீட்சா எமோஜிகளைப் பதிவிட்டு, பரவி வரும் வதந்திகளை நகைச்சுவையாக கடந்து சென்றுள்ளார்.

ஏற்கனவே தைமூர் மற்றும் ஜே ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்பதை கரீனா கபூர் தனது முந்தைய பேட்டிகளில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.