பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ் (X) தளத்தில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கேதன் அகர்வால் சம்பந்தப்பட்ட புனே கொலை வழக்கு குறித்த விவாதங்கள் எக்ஸ் தளத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஒரு பயனர் ராகுல் ரவீந்திரனை குறிவைத்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனைகள் தொடர்ந்து வலுவாக உள்ளன என கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத கணக்கில் இருந்து ராகுல் ரவீந்திரன் மற்றும் சின்மயி தம்பதியரின் குழந்தைகளை கொலை செய்யப்போவதாக மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இது தன்னை ஆழமாக பாதித்ததாகவும், இணைய விவாதங்கள் எல்லை மீறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுவாக சமூக வலைதள விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியும் என்றாலும், இந்த சம்பவம் தனக்கு அதிக வலி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக, தனது மன அமைதிக்காக எக்ஸ் தளத்தை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

