நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்கும் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நெல்சன் இணையும் புதிய படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து பேச்சுகள் நிலவி வந்தன.
இந்நிலையில், இந்தக் கூட்டணி குறித்து பிரபல தயாரிப்பாளரும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாக வம்சி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், நெல்சன் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் வரிசையில் இருப்பதாகவும், அவருடனான கமிட்மெண்ட் எந்த நிலையிலும் மாறாது என்றும் கூறியுள்ளார். மேலும், நெல்சன் தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என்றும், ஆரம்பம் முதலே ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணியில் ஒரு படம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இருவரின் கால்ஷீட் தேதிகளை ஒருங்கிணைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாக நாக வம்சி கூறியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சனின் வித்தியாசமான டார்க் காமெடி பாணியும், ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ் ஆக்ஷன் ஸ்டைலும் இணைந்தால், இந்தப் படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தேவரா: பாகம் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு பான்-இந்தியா அளவில் கவனம் பெற்றுள்ள ஜூனியர் என்.டி.ஆர், தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலும், வார் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
மறுபுறம், நெல்சனும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இருவரின் தற்போதைய படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு, இந்த மெகா கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

