தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. சினிமாவில் பிசியாக இருந்தபோதே பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வந்தார்.
கணவர் ஸ்ரீஹரி மறைவுக்குப் பிறகு தனது மகன்களுடன் ஐதராபாத்தில் வசித்து வரும் டிஸ்கோ சாந்தி, சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவருக்கு என்ன ஆனது என அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து டிஸ்கோ சாந்தி அளித்த விளக்கத்தில், தனது அம்மாவின் நெருங்கிய தோழி சமீபத்தில் சென்னையில் உயிரிழந்ததாகவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அன்றைய தினமே ஐதராபாத் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் பயணம் செய்து திரும்பியதால் அடுத்த நாள் கடுமையான உடல்வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் தொடர்ந்து இருக்க முடியாததால், வீட்டில் செவிலியர் மூலம் சிகிச்சையைத் தொடர்வதாகக் கூறி நேற்று வீடு திரும்பியதாகவும், தற்போது தனது உடல்நிலை தேறி வருவதாகவும் டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார்.

