பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள தனது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ஆமீர் கானின் மூன்றாவது திருமணமாகும்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆமீர் கான், “ஜூலை 5-ஆம் தேதி எங்கள் திருமணம் நடைபெறுகிறது. வீட்டிலேயே மிகவும் எளிமையாக நடத்துகிறோம். இரு குடும்பத்தினரும், சில நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இதில் பங்கேற்பார்கள். அனைவரின் வாழ்த்துகளும் எங்களுக்கு வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த கவுரி ஸ்ப்ராட், ஃபேஷன், அழகு மற்றும் ஆரோக்கியத் துறையில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர். ஆமீர் கானுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருந்த அவர், பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாக மாறினார். கடந்த ஆண்டு தனது 60-வது பிறந்தநாளில் கவுரியை உலகிற்கு தனது துணையாக ஆமீர் கான் அறிமுகப்படுத்தியிருந்தார்.
பாலிவுட்டில் வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்ட திருமணங்களுக்கு மாறாக, இந்தத் திருமணம் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. திருமணப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 100 முதல் 150 நெருங்கிய விருந்தினர்களுக்காக பிரத்யேக மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமீர் கானின் முதல் மனைவி ரீனா தத்தா மூலம் ஜுனைத் கான், ஈரா கான் ஆகிய இரு பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் ராவ் கானும் உள்ளனர். அதேபோல், கவுரி ஸ்ப்ராட்டுக்கும் அவரது முந்தைய திருமணத்தில் ஒரு மகன் உள்ளார். இரு குடும்பங்களின் குழந்தைகளும் இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது மும்பையில் உள்ள ஆமீர் கானின் பாலி ஹில் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருமணக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

