இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உள்ளிட்டோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்தப் படத்தில் நடித்த வில்லத்தனமும் தீவிரமான கதாபாத்திரமும், தனது சினிமா வாழ்க்கையிலேயே மிகவும் இயல்பாக நடித்த வேடங்களில் ஒன்றாக இருந்ததாக அதர்வா கூறியுள்ளார். சுதா கொங்கராவை நீண்ட காலமாக அறிந்திருந்ததால், அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழி, பேச்சு நடை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது தனக்கு மிகவும் எளிதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பராசக்தி’ படத்திற்குப் பிறகுதான் தாம் நீண்ட நாட்களாக ஒரே மாதிரியான ‘கம்ஃபர்ட் ஜோன்’ கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்ததை உணர்ந்ததாக அதர்வா கூறியுள்ளார். அதனால் இனிமேல் முற்றிலும் மாறுபட்ட, சவாலான கதைகளையே தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“இப்போது நான் ‘இதயம் முரளி’ படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் இனிமேல் அப்படிப்பட்ட கதைகளில் மட்டுமே தொடர விரும்பவில்லை. இன்னும் தீவிரமான, புதுமையான, ரசிகர்களை ஈர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,”
என்று அதர்வா தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ‘பராசக்தி’ படத்தின் சம்பள நிலுவை ரூ.8.39 கோடி வழங்கப்படவில்லை என்று கூறி சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதும், ‘இதயம் முரளி’ பட வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை கோரியிருப்பதும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்கிடையில் அதர்வாவின் சமீபத்திய பேட்டி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

