Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

'Baahubali 3' in the Works... Massive Update Sparks Buzz!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக அமைந்தது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ‘பாகுபலி’ மற்றும் 2017-ல் வெளியான ‘பாகுபலி 2’ ஆகிய இரு பாகங்களும் இணைந்து உலகம் முழுவதும் சுமார் ரூ.2,500 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவுக்கு புதிய சாதனையைப் படைத்தன. பின்னர், 2025-ஆம் ஆண்டு இரு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ‘பாகுபலி’ படத்தின் உருவாக்கப் பயணம், படப்பிடிப்பு அனுபவங்கள், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் படக்குழுவினரின் நினைவுகளை பதிவு செய்த ‘Baahubali: The Torchbearer’ என்ற ஆவணத் தொடர், இன்று பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணத் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் ராணா டகுபதி ஒன்றாக உரையாடும் போது, “உலகம் இன்னும் அதற்கு தயாராகவில்லை… ஆனால் பாகுபலி…” என்று ராணா சஸ்பென்ஸாக கூறுகிறார். உடனே பிரபாஸ் சிரித்தபடி தனது கையில் மூன்று விரல்களை காட்ட முயல, அனுஷ்காவும் ராணாவும் அவரை தடுத்து சிரிக்கின்றனர். இறுதியில், “பாகுபலியின் பாரம்பரியம் தொடரும்” என்ற வாசகத்துடன் அந்த காட்சி நிறைவடைகிறது.

இந்த வீடியோவைத் தொடர்ந்து ‘பாகுபலி 3’ உருவாகும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து படக்குழு அல்லது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தை ராஜமௌலி இயக்கி வரும் நிலையில், ‘பாகுபலி 3’ குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.