இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘கோல்டன் பிளேட்’ (Golden Plate Award) விருதைப் பெற்று மேலும் ஒரு சர்வதேச சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்லன் ஆடிட்டோரியத்தில், அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட் அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் இந்த விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ திரைப்படங்களின் இயக்குநர் பீட்டர் ஜாக்சன், நேரில் விருதை வழங்கி அவரை கௌரவித்தார்.
கலை, அறிவியல், பொதுச் சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கோல்டன் பிளேட் விருது கருதப்படுகிறது. இந்த விருதின் மூலம், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமி, நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன் உள்ளிட்ட சர்வதேச ஜாம்பவான்களின் வரிசையில் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்துள்ளார்.
விருதைப் பெற்ற பிறகு பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “இந்த உயரிய கௌரவத்தைப் பெறுவது எனக்கு மிகுந்த பணிவையும் பெருமையையும் அளிக்கிறது. இந்தியா, என் தாய்மண், என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பீட்டர் ஜாக்சனுடன் இணைந்து விருதை ஏந்திய புகைப்படத்தை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சாதனையைத் தொடர்ந்து இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #ARRahman மற்றும் #GoldenPlateAward ஹேஷ்டேக்குகளும் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே இரண்டு ஆஸ்கர், இரண்டு கிராமி, பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் சாதனைப் பட்டியலில் தற்போது ‘கோல்டன் பிளேட்’ விருதும் இணைந்திருப்பது, இந்திய இசை உலகிற்கு மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளது.

