1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’, மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து சிந்திக்க வைக்கும் சமூகப் படைப்பாக உருவாகியுள்ளது.
படித்தும் வேலை கிடைக்காமல் விரக்தியில் வாழும் இளைஞர் வெற்றி, தனது நண்பருடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறார். எதிர்பாராத சூழ்நிலையால் கடன் கொடுத்த பெண்ணைக் கொலை செய்த குற்றத்தில் சிக்கி, இறுதியில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவில், நீதிபதி, மருத்துவர் மற்றும் சிறை அதிகாரியிடம் “தூக்குத் தண்டனையும் அரசால் செய்யப்படும் ஒரு கொலைதான்” என்ற கேள்வியை வெற்றி எழுப்புகிறார். அந்த ஒரு கருத்தே படத்தின் மையக்கருவாக மாறுகிறது. அவரது வாதத்திற்கு சட்டம் என்ன பதில் அளிக்கிறது? தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறதா? என்பதே கிளைமாக்ஸ்.
நாயகன் வெற்றி, தனது கதாபாத்திரத்தின் வேதனை, கோபம், விரக்தி மற்றும் உணர்ச்சிகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். லிசி ஆண்டனி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி, ‘பருத்திவீரன்’ சரவணன், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.
எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு நீதிமன்றம் மற்றும் சிறைக் காட்சிகளை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசை, படத்தின் உணர்வுகளை மேலும் ஆழமாக்குகிறது.
இயக்குநர் தயாள் பத்மநாபன், “சட்டத்தின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; மனிதனை திருத்தி சமூகத்தில் மீண்டும் வாழ வைப்பதே” என்ற கருத்தை வலிமையாக பதிவு செய்துள்ளார். மரண தண்டனை மற்றும் நீதித்துறை குறித்து பார்வையாளர்களிடம் விவாதத்தை உருவாக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸில் எழுப்பப்படும் கேள்விகள் நீண்ட நேரம் மனதில் நிற்கின்றன.
மொத்தத்தில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ ஒரு கொலை மர்மக் கதையைத் தாண்டி, நீதி, மனிதநேயம் மற்றும் மரண தண்டனை குறித்து சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக திகழ்கிறது.

