பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘இதயம் முரளி’.
திருச்சியில் பள்ளியில் படிக்கும் காலத்தில் ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கும் அதர்வா, பலமுறை தனது காதலை வெளிப்படுத்த முயன்றும் முடியாமல் போகிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையில் கயாடு லோகருடன் நெருக்கம் ஏற்பட்டு அவரிடமும் காதலை சொல்ல நினைக்கிறார். ஆனால் அங்கும் எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறது. இறுதியில் அதர்வாவின் காதலை யார் ஏற்றுக்கொண்டார்? அவர் அமெரிக்கா சென்றதற்கான காரணம் என்ன? பகத் பாசில் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அதர்வா, பள்ளி மாணவனாகவும் கல்லூரி இளைஞராகவும் இருவேறு பருவங்களை இயல்பாக வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன் தனது அழகு, நடிப்பு மற்றும் நடனத்தால் கவனம் ஈர்க்கிறார். குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் கயாடு லோகரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.
சின்னி ஜெயந்த், நிகாரிகா, ஜோனிட்டா உள்ளிட்ட துணை நடிகர்கள் மனதில் நிற்கின்றனர். தமன், பரிதாபங்கள் சுதாகர், ரக்ஷன், டிராவிட் ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. அதேநேரத்தில், பகத் பாசிலின் கதாபாத்திரம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், இளமைக்கால காதல், நட்பு மற்றும் வாழ்க்கை நினைவுகளை வண்ணமயமாக திரையில் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அதர்வாவின் காட்சிகள் நடிகர் முரளியின் பழைய காதல் திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. “இதயா”, “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” போன்ற பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
இருப்பினும், தேவையில்லாத சில சண்டைக் காட்சிகள், ஆங்காங்கே தோன்றும் லாஜிக் குறைபாடுகள் மற்றும் பதிலளிக்கப்படாத சில கேள்விகள் படத்தின் பலவீனங்களாக தெரிகின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை வழங்கியுள்ளது. தமன் இசை கதைக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தாலும், அனைத்து பாடல்களும் ரசிகர்களை முழுமையாக கவரும் அளவுக்கு அமையவில்லை.
மொத்தத்தில், ‘இதயம் முரளி’ இளமைக்கால காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை இணைத்து குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய வண்ணமயமான பொழுதுபோக்கு திரைப்படமாக திகழ்கிறது.

