இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷண்’ விருது கடந்த ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்த மகத்தான சாதனையை, மம்மூட்டி தற்போது நடித்து வரும் தமிழ் திரைப்படமான ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் மம்மூட்டியும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சென்னை திரும்பிய மம்மூட்டிக்கு, தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் படப்பிடிப்பு தளத்திலேயே சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் மம்மூட்டி கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம், “படப்பிடிப்பு தளத்தில் வாழும் ஜாம்பவானுடன் கொண்டாட்டம்! மெகாஸ்டார் மம்மூக்காவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட மம்மூட்டி, “பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதில் மிகுந்த பணிவும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த அங்கீகாரம் எனது ஐந்து தசாப்த கால சினிமா பயணத்தின் பிரதிபலிப்பு. என் அன்பான ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.


