நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், 2018 ஆம் ஆண்டு தொடங்கிய ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் நடிகர் தேர்வு மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் தகவல்களை பகிர்ந்துள்ள நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வுகளை இயக்குநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது காஸ்டிங் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளவில்லை. எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் எங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் வெளியிடப்படும். வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது போலி சமூக வலைத்தள தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

