தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (நடராஜ்) சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “புலி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சார், இதுவரை தனது ரசிகர்களுக்காக பல வகை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், 8 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒரு படம் கூட செய்யவில்லை என்று கூறினார். பேசும் விலங்குகள், கற்பனை உலகம் என குழந்தைகளை மையமாகக் கொண்ட கதையாக இருந்ததால்தான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பினார்” என்றார்.
மேலும், “‘புலி’ ஒரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ரசிக்கும் ஃபேண்டஸி திரைப்படம். ஆனால் வெளியீட்டின்போது வசூலை மனதில் வைத்து அதை முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷன் படமாக விளம்பரப்படுத்திவிட்டனர். குழந்தைகளுக்கான படமாக சரியாக விளம்பரப்படுத்தியிருந்தால், குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்திருப்பார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும். தவறான விளம்பரம்தான் அதன் தோல்விக்கு முக்கிய காரணம்” என்று நட்டி தெரிவித்தார்.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான ‘புலி’, திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு முதலீட்டை மீட்டுத் தந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த தமிழ்ப் படமாகவும், அவரது கடைசி தமிழ்த் திரைப்படமாகவும் ‘புலி’ அமைந்தது.

