இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் நடித்துள்ள இந்த வரலாற்று காவியத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் தோன்றிய ரகுல் பிரீத் சிங் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த நிலையில், “சூர்ப்பனகை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு என்ன ஊக்கமாக இருந்தது?” என்று ரசிகை ஒருவர் கடிதம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் தளத்தில் சுவாரஸ்யமான பதிலை பகிர்ந்துள்ளார்.
அதில், சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தின் பல அடுக்குகள் கொண்ட தன்மையே தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “வரலாறு அவரை ஒரு சம்பவத்தின் அடிப்படையில் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறது. ஆனால், அந்தக் கதாபாத்திரத்திற்கு இன்னும் பல பரிமாணங்கள் உள்ளன. பார்வையாளர்களின் பார்வையை மாற்றும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், படம் வெளியாகிய பிறகு, சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் ரகுல் பிரீத் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

