‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து ராஜமௌலி வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பிரம்மாண்ட ஆக்ஷன் – அட்வென்ச்சர் படமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க, துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
படப்பிடிப்பில் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் படத்தின் கதை குறித்து ராஜமௌலி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘வாரணாசி’ ஒரு சாதாரண ஆக்ஷன் திரைப்படம் அல்ல; இதில் டைம் டிராவல் அம்சமும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கதையின் பயணம் வாரணாசியில் தொடங்கி, அங்கிருந்து அண்டார்டிகா, ஆப்பிரிக்கா வழியாக ராமாயண காலத்திற்கு சென்று மீண்டும் வாரணாசிக்குத் திரும்பும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கதையை 2022-ம் ஆண்டு முதல் சுமார் நான்கரை ஆண்டுகளாக மெருகேற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இந்தியானா ஜோன்ஸ்’ போன்ற சாகசப் படங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ராஜமௌலி, அதே பாணியில் உலகத் தரத்தில் இந்தப் படத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, அண்டார்டிகாவில் அமைந்துள்ள 300 அடி உயர பனிப்பாறை காட்சிகள் மற்றும் ராமாயண காலத்தின் பிரம்மாண்டமான வானரப் படை காட்சிகளை உருவாக்க IMAX கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில் IMAX தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதம் தன்னை பெரிதும் ஊக்குவித்ததாகவும், அதே தரத்தில் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

