Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நூறு சாமி”-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி

Vijay Antony Has Lived as a Rural Man in Nooru Saami – Director Sasi

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள “நூறு சாமி” படத்தில் கிராமத்து மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி பாராட்டு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், கிராமத்து பின்னணியில் ஒரு ஒற்றைத் தாயின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு சொல்லப்படும் கதையாகும்.

படத்தில் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை பாலாஜி ஸ்ரீராம் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ் கவனித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சசி பேசுகையில், “தாயை தெய்வமாக மதித்தவன் ‘பிச்சைக்காரன்’; தாயை மனிதராக புரிந்துகொள்ளத் தொடங்கியவன் ‘நூறு சாமி’” என்றார்.

மேலும், “இந்தப் படத்தின் இரண்டு மிகப்பெரிய பலங்கள் சுவாசிகாவின் அற்புதமான நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பும்தான். ஒரு நடிகராக அவர் மேலும் பல மடங்கு வளர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கவில்லை; கிராமத்து மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோல், சுவாசிகாவும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். ‘நூறு சாமி’ வெளியான பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக அவர் பேசப்படுவார்” என்று பாராட்டினார்.

நகரம் மற்றும் கிராமம் ஆகிய இரு சூழல்களிலும் கதைகளை உருவாக்கி வரும் சசி, “நகர வாழ்க்கையில் வளர்ந்தாலும், கிராமக் கதைகளை சொல்லுவதில் எனக்கு தனி ஈர்ப்பு இருக்கிறது. அந்தக் கதைகளின் இயல்பும், மண் மணம் மாறாத மனிதர்களும் என்னை தொடர்ந்து கவர்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.