‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இந்தப் படம், கண்ணியமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மையமாகக் கொண்ட ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.
படத்தில் கே. மணிகண்டன் நாயகனாக நடிக்க, வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை பிரதீபன் செல்வரத்தினம் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி டான் அசோக், ஒலியமைப்பு ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு சுரேஷ்குமார், ஒப்பனை ராமச்சந்திரன் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா பணியாற்றுகிறார்.
படம் குறித்து நடிகர் கே. மணிகண்டன் கூறுகையில், “மக்கள் காவலன் கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான ஆக்ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனடியாக கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னை தூண்டியது. விறுவிறுப்பும், தீவிரமும் நிறைந்த இந்தக் கதை இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. இயக்குநர் சந்தோஷ் முதன்முதலாக இந்தக் கதையை கூறியபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவுப் படம். நாங்கள் நினைத்தபடியே படம் உருவாகி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்றார்.

