ஆதரவற்ற இளைஞரான ஜெய், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மீனாட்சி கோவிந்தராஜனை சந்திக்கும் அவர், முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். அதே நாளில் மீனாட்சியை ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாற்றும் ஜெய், பின்னர் அவருடன் நெருக்கமாகி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு செல்கிறார்கள். அங்கு கருடன் ராம் நடத்தும் ரிசார்ட்டில் தங்கும் அவர்கள், அதன்பிறகு பல மர்ம சம்பவங்களை சந்திக்கிறார்கள்.
இதற்கிடையில், மீனாட்சியின் தந்தையும் அமைச்சருமான அஜய், தனது மகளை இரண்டாம் திருமணமாக ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்கிறார். மறுபுறம், மீனாட்சியின் நண்பர் சொத்துக்காக அவரை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். பல பிரச்சனைகள் மற்றும் மர்மங்களின் நடுவில், ஜெய் – மீனாட்சி இணைந்து வாழ்க்கையை தொடர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்துள்ள ஜெய், ஐடி இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், உணர்ச்சி, நடனம், பாசம் என பல்வேறு பரிமாணங்களில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக மீனாட்சியுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் நல்ல கெமிஸ்ட்ரி அமைந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன், பாசம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
கருடன் ராம் மற்றும் அஜய் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். யோகி பாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு லேசான நகைச்சுவை ரசனையை கொடுக்கிறது.
காதல், ஆக்ஷன், கிரைம், திரில்லர் ஆகிய அம்சங்களை கலந்த கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளார் இயக்குநர் பாபு விஜய். தொடக்கத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, பின்னர் வேகம் எடுத்து சுவாரஸ்யமாக மாறுகிறது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அதை சமநிலைப்படுத்துகிறது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

