சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லட்சுமி நாராயணனின் 100-வது ஆண்டு நினைவு விழாவில், நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடனக் கலைஞரும் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், பாரம்பரிய கலைகள் சரியான முறையில் கையாளப்பட வேண்டும் என்ற தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவரது பதிவில், “பாரம்பரிய நடனம்தான் மீண்டும் மீண்டும் தவறாக ஆடப்படும் ஒரே கலை வடிவமாக உள்ளது. இருந்தாலும் மக்கள் அதை கேள்வி கேட்காமல் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். பிரபுதேவா போன்ற புகழ்பெற்ற நடனக் கலைஞர் இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத தவறை செய்வார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வாய்ப்பை பிரபுதேவாவுக்கு வழங்குவதற்குப் பதிலாக, பரதநாட்டியத்தில் முறையாகப் பயிற்சி பெற்ற ஒரு இளம் கலைஞருக்கு வழங்கியிருந்தால், அது வளர்ந்து வரும் திறமையான நடனக் கலைஞருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும்” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தி சஞ்சீவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு தரப்பு அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு பிரபுதேவாவின் குரு மரியாதையை முன்னிறுத்தி அவருக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகிறது. இதனால் இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

