1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சுரேஷ் கோபி நடித்த ‘கலெக்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்த மோகினி, அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
வைசாக் இயக்கத்தில், பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘நூர்ஜஹான்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுடன், அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
பிருத்விராஜ் – வைசாக் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் வரும் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகினி மீண்டும் திரையில் தோன்றுவது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

