கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா?” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, “தமிழ்நாட்டு அரசியலில் ஏற்கனவே நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருக்கும்போது, நானும் அந்தக் கூட்டத்தில் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” எனக் கேட்டார்.
மேலும், “நான் அரசியலுக்கு வர வேண்டுமா? தேவையே இல்லை. நோ, ரிஜெக்டட்! நான் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு அந்த ஆசையும் இல்லை; அது நடக்கவும் நடக்காது” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி கதை எழுதி, கதாநாயகனாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் அரசியல் கிண்டல் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அவர் நிஜ அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஆர்.ஜே. பாலாஜி தெளிவான பதிலை அளித்துள்ளார்.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியான நிலையில், தற்போது புதிய படத்தில் நடித்து வருவதுடன், மற்றொரு புதிய கதையையும் எழுதி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

