நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார்.
வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாaக வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் மோகன்லால், பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் தனது வசமுள்ள அனைத்து வனவிலங்கு பொருட்களின் விவரங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு, வருமான வரித்துறை அவரது இல்லத்தில் நடத்திய சோதனையில் யானைத் தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முறையான அனுமதியின்றி நான்கு யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தனிநபர்கள் தங்கள் வசமுள்ள வனவிலங்கு பொருட்களை அறிவிக்க வேண்டும் என்ற கேரள வனத்துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்பு நான்கு யானைத் தந்தங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த மோகன்லால், தற்போது கூடுதலாக 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
அவர் அறிவித்துள்ள தந்தச் சிலைகளில் கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோகிராம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

