விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.
இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான VFX காட்சிகள் மூலம் படத்தின் காட்சித் தரத்தை மேலும் உயர்த்த படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

