பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும், தொடர்ந்து உயர்ந்து வரும் சம்பளமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் மனைவியான கியாரா, ஆரம்ப காலங்களில் ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதன்பின் வார் 2 படத்தில் அவரது சம்பளம் மேலும் உயர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது யாஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்திற்காக கியாரா அத்வானி ரூ.15 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் டாக்சிக் படத்தின் ‘தபாஹி’ பாடலில் யாஷுடன் கியாரா நடித்த சில நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தன.
டாக்சிக் படத்திற்காக கூறப்படும் இந்த ரூ.15 கோடி சம்பளத்தின் மூலம், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் கியாரா அத்வானியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் கியாரா அத்வானிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

