தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் தேஜா லட்சுமி திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
மலையாளத்தில் சுந்தரியாயவள் ஸ்டெல்லா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தேஜா லட்சுமி, தற்போது கன்னட சினிமாவிலும் நாயகியாக களமிறங்குகிறார். ‘புல்லி’ என்ற டார்க் காமெடி திரைப்படத்தில் நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், ஊர்வசியும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னட திரையுலகிற்கு திரும்பும் அவர், படத்தில் கதாநாயகனின் தாயாக நடிக்கிறார். இதன் மூலம் ஊர்வசி மற்றும் அவரது மகள் தேஜா லட்சுமி முதல் முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஊர்வசி கூறுகையில், “என் மகள் தேஜா இந்தப் படத்தின் மூலம் கன்னட திரையுலகில் தனது பயணத்தை தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் கதையைச் சொல்ல படக்குழு சென்னை வந்தபோதே இந்தக் கதையுடன் நான் ஒன்றிப்போனேன். இந்த வாய்ப்பை ஏற்காமல் இருந்திருந்தால் ஒரு சிறந்த படத்தைத் தவறவிட்டிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

