தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்க, பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி வெளியீட்டை நோக்கி படக்குழு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘சேயோன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் இது தொடர்பான முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கிய அந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

