நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனது அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான விஷயங்களை அந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது.
‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?’ என்ற எண்ணத்திலிருந்து வெளியே வந்து, இந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதோ இருக்கிறது என்பதை உணர சிறிது காலம் ஆனது. அந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள், என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பகுதியாக மாறிவிட்டன” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சமந்தா சமீபத்தில் தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும், தான் நடித்து தயாரித்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள உள்ளதாகவும், அதன்பிறகு மீண்டும் புதிய திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

