சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறையினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், இளம் தலைமுறைக்கு நல்ல சமூகச் செய்தியை கொண்டு சேர்க்கும் படமாக இது அமையும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தனர்.
விழாவில் பேசிய நடிகர் ஹெச். ராஜா, தனது உடல்நலப் பிரச்சினையின் போது கிடைத்த ஆதரவை நினைவுகூர்ந்தார். “எனது உடல்நலக் குறைபாட்டின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது. இறைவனின் அருளால் அறுவை சிகிச்சைக்கு ஆறு மாதங்களிலேயே மீண்டும் உங்கள் முன்னால் நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக இறைவனுக்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.
மேலும், இந்தப் படம் குறித்து பேசுகையில், “இயக்குநர் ராஜா ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல மறந்துவிட்டார். இந்தப் படத்தில் எந்த நடிகருக்கும் மேக்கப் பயன்படுத்தப்படவில்லை. அனைவரும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும் நடித்துள்ளோம். இயக்குநர் கூறியபடி உண்மைத்தன்மையுடன் நடித்திருக்கிறோம். மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் சந்திக்கும் கஷ்டங்களையும் தியாகங்களையும் இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் இந்தப் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றைய இளம் தலைமுறையை பாதித்து வரும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற பல முக்கிய சமூகப் பிரச்சினைகளை ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பையும் படம் வலியுறுத்துகிறது.
மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

