தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் நடிகர் தனுஷின் பெயரை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். “தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்! தமிழ் சினிமாவில் அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை” என உற்சாகமாக பதிலளித்துள்ளார்.
கயாடு லோஹர் இதுவரை தனுஷுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான அவரது ‘காரா’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மற்ற படங்களின் படப்பிடிப்பு கால்ஷீட்டுடன் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த வாய்ப்பை அவரால் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதாகத் தெரிகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கயாடு லோஹர், தொடர்ந்து அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ படத்தில் நடித்தார். மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் தோன்றிய ‘பவழ மல்லி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’, துல்கர் சல்மானுடன் நடித்துள்ள ‘ஐ அம் கேம்’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளார். இதுதவிர சூர்யாவின் 48-வது திரைப்படம், சிவகார்த்திகேயன் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மஞ்சநெத்தி’ உள்ளிட்ட பல்வேறு முக்கிய படங்களிலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார்.

