தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ அணியும் மோதின. பொதுச்செயலாளர் பதவிக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன், மனோஜ்குமார் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர். சுந்தர்ராஜன், லியாகத் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.
மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணி வெற்றி பெற்றுள்ளது. 12 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 279 வாக்குகள் பெற்று இயக்குநர் சேரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். முதலில் இந்தத் தேர்தல் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

