மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தலைவர் ஸ்வேதா மேனன் மற்றும் நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில், வெறும் 10 மாதங்களிலேயே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
31 ஆண்டுகளாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த AMMA அமைப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகவும், பின்னணிக் குரல் கலைஞர் குக்கு பரமேஸ்வரன் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டது.
ஆனால் பதவியேற்ற சில மாதங்களிலேயே தலைவரும் பொதுச்செயலாளரும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அலுவலக மேலாளர் அதுல்யா பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அமைப்புக்குள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதோடு, பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப சங்கமம் நிகழ்ச்சிக்காக பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.70 லட்சம் நன்கொடை தொடர்பான கணக்குகள் குறித்து அமைப்புக்குள் கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரமும் நிர்வாகக் குழுவினரிடையே அதிருப்தியை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இணைச் செயலாளராக இருந்த அன்சிபா ஹசன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார். அதற்கு பதிலாக அவர்மீதும் எதிர் புகார்கள் அளிக்கப்பட்டதால், அமைப்பின் உள்பிரச்சினைகள் வெளிப்படையாக பேசப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த தொடர் சர்ச்சைகளுக்கு தீர்வு காண பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. காக்கநாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த நடிகர் மோகன்லால் கலந்து கொண்ட நிலையில், பல முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து கடும் விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சிகள் நடந்ததாகவும், சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்வேதா மேனன் தலைமையிலான 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா செய்துள்ளது. மேலும், ஸ்வேதா மேனன் தனது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், AMMA அமைப்பின் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்க தற்காலிகக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ரமேஷ் பிஷாரடி பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

