நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகி கெனிஷாவின் பெயரும் அடிக்கடி பேசப்பட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது.
இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனவேதனையுடன் பேசியதோடு, தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலளித்தார். மேலும், விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் முடியும் வரை நடிப்பில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், நடிகர் ரவிமோகன் தற்போது ஆன்மிக பயணத்தைத் தொடங்கியுள்ளார். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்துள்ள அவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவிமோகன் எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அவர் முன்பு தெரிவித்ததுபோல் சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி, ஆன்மிகப் பாதையை நோக்கி நகர்ந்து வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

