நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய அறிவிப்புகளை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது அடுத்த வெளியீடாக ‘இரண்டு வானம்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே நல்ல தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய விளையாட்டு பின்னணியிலான திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தார். மேலும், தனது 25-வது திரைப்படத்திற்கான கதையும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.
‘கட்டா குஸ்தி 2’ பற்றி என்ன சொன்னார்?
‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்திற்காக வெறும் 5 நாட்கள் மட்டுமே மல்லுயுத்தப் பயிற்சி எடுத்ததாக கூறிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்திற்காக 20 நாட்கள் தீவிரமாக பயிற்சி பெற்று நடித்துள்ளதாக தெரிவித்தார்.
“முதல் பாகம் பெண்களை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ வாழ்க்கையை பேசுகிறது. குடும்பம், உறவுகள், சமூக பார்வைகள் ஆகியவற்றை நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் சொல்லும் முழுமையான என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது,” என்றார்.
மேலும், கணவன்-மனைவி உறவுகளுக்குள் உருவாகும் சிக்கல்களை மையமாக வைத்து ‘கட்டா குஸ்தி 3’ உருவாக்கும் யோசனையும் தற்போது தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சதீஷ் செல்வகுமாருடன் புதிய படம்
‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ் செல்வகுமாருடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘ஒரு மாம்பழ சீசனில்’ திரைப்படம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக அதே இயக்குநரின் மற்றொரு புதிய கதையில் நடிக்க உள்ளதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
அமீர்கான் பாராட்டு
சந்திப்பின் போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் குறித்து பேசிய விஷ்ணு விஷால், “என்னுடைய ‘ராட்சசன்’ மற்றும் ‘FIR’ படங்களை பார்த்துவிட்டு அமீர்கான் மிகவும் பாராட்டினார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்தும் பேசினோம். அது நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று கூறினார்.
அடுத்தடுத்த திரைப்படங்கள், 25-வது படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் அமீர்கானின் பாராட்டு குறித்து விஷ்ணு விஷால் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

