சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும். குறிப்பாக கதாநாயகிகளை பொறுத்தவரை வயது, நீண்ட இடைவெளி, புதுவரவு நடிகைகள் என பல்வேறு சவால்கள் காத்திருக்கும். ஆனால், இவை அனைத்தையும் கடந்து தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்து தங்களது இடத்தை கம்பீரமாக தக்க வைத்துக் கொண்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் தங்களை மறந்துவிடுவார்கள் என்ற கணக்குகளையெல்லாம் பொய்யாக்கி, திறமைக்கும் திரை ஆளுமைக்கும் காலம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த சில நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
ஜோதிகா
இந்த பட்டியலில் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேமரா முன்பு நிற்கும்போது தனக்கே பதட்டமாக இருந்ததாக ஜோதிகா தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளியானதும் ரசிகர்கள் அவரை அதே அன்புடன் வரவேற்றனர். குறிப்பாக, ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட கதையில் கதாநாயகியாக நடித்த ஜோதிகாவின் கம்பேக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன்பிறகு ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ என வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக அமைத்தார்.
சிம்ரன்
90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். நடிப்பு, நடனம், திரை ஆளுமை என தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.
சினிமாவில் இருந்து விலகியிருந்த சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற வரம்பை தாண்டி, தனது வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யத் தொடங்கினார். இதன் மூலம் ‘மகான்’, ‘அந்தகன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
லைலா
2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் லைலா. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சர்தார்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார்.
நீண்ட இடைவெளி இருந்தபோதிலும், லைலாவை ரசிகர்கள் மறக்கவில்லை. அவர் மீண்டும் திரையில் தோன்றிய தருணமே ரசிகர்களுக்கு அவரது பழைய படங்களின் நினைவுகளை ஏற்படுத்தியது.
ஹீரோயினாக நடித்த காலத்தை கடந்து, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் லைலா, தனது இரண்டாவது இன்னிங்சையும் சிறப்பாக தொடங்கியுள்ளார்.
காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த காஜல் அகர்வால், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.
பின்னர் மீண்டும் திரும்பிய காஜல் அகர்வால், தனது சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற பழைய பார்வையை மாற்றிய நடிகைகளில் காஜலும் ஒருவர்.
தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் புதிய அணுகுமுறையை கடைப்பிடித்து வரும் அவர், திரையுலகில் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.
ரோஜா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ரோஜா. குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் காரணமாக பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் கம்பேக் கொடுத்துள்ள ரோஜா, ‘லெனின் பாண்டியன்’, ‘அன்பே டயானா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்த நடிகைகள், காலம் கடந்த பிறகும் தங்களது நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர முடியும் என்பதை இந்த நடிகைகளின் ரீ-என்ட்ரிகள் நிரூபித்துள்ளன.
ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டால், சினிமாவில் இடைவெளி வந்தாலும் அந்த இடத்தை யாராலும் எளிதில் நிரப்ப முடியாது என்பதற்கு இந்த நடிகைகளின் கம்பேக் பயணங்களே சாட்சி!

