நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், நிதிச் சிக்கல்கள் மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் காரணமாக பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வருகிறது. முன்னதாக ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், அந்த காலக்கெடுவுக்குள் நிதி தொடர்பான பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க முடியாததால், கூடுதல் அவகாசம் கோரி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்தை வெளியிட ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ‘துருவ நட்சத்திரம்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

