இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி எஸ். வருண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய கே. பாக்யராஜ், ரவி மரியாவின் மனிதநேய குணங்களை வெகுவாகப் பாராட்டினார்.
“பொதுவாக ஒரு பூவின் மணம் காற்று வீசும் திசையில் தான் பரவும். ஆனால் ஒரு மனிதனின் நற்பெயர் மட்டும் காற்றுக்கு எதிராகவும் பயணிக்கும். அந்த வகையில் ரவி மரியாவின் நல்ல மனமும் உதவும் குணமும் அவரை எங்கு சென்றாலும் முன்னிலைப்படுத்துகிறது. இங்கு பேசிய அனைவரும் அவரது பெருந்தன்மை குறித்து குறிப்பிட்டதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்,” என்றார்.
மேலும், “இந்தப் படத்தில் ரவி மரியா முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இந்த விழாவை அவர் மிகுந்த அக்கறையுடன் ஒருங்கிணைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா போன்ற சிறந்த பேச்சாளர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பதை இங்கு வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். அவர்களின் தமிழ்ப் பேச்சைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். இலக்கணத் தமிழை அழகாகப் பேசக்கூடியவர்களில் அவர்கள் முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.
சென்சார் அனுபவங்கள் குறித்து பேசிய அவர், “என்னுடைய பல படங்கள் சென்சார் குழுவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘மௌன கீதங்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை சென்சார் குழுவில் இருந்த சிலர் இரட்டை அர்த்தம் கொண்டதாகக் கருதினர். ஆனால் அந்தக் காட்சி கணவன்-மனைவி இடையேயான இயல்பான உரையாடல் என்பதை விளக்கினேன். சில நேரங்களில் காட்சிகளின் சூழலை சரியாக எடுத்துரைத்தால் அவை திரையில் இடம்பெற முடியும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் படத்தில் இயக்குநர் ராம் தேவ் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசுகிறார். ஆனால் என் படங்களில் அரசியல் என்றால் அது பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும். அதனால் நான் திரைப்படங்களை இயக்கிய காலத்தில் சென்சார் குறித்து பெரிதாக கவலைப்பட்டதில்லை. கதையின் உண்மைத் தன்மையும் அதன் நோக்கமும் சரியாக இருந்தால் அதை தைரியமாக சொல்ல வேண்டும் என்பதே என் நம்பிக்கை,” என்று தெரிவித்தார்.
‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே. பாக்யராஜின் இந்த கருத்துகள் கவனம் பெற்றதுடன், படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தின.

