தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தை இயக்கியபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் திரையுலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
திருமணமான அதே ஆண்டில் அக்டோபர் மாதம், இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். குடும்ப வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் சமநிலையை பேணி வரும் நயன்தாரா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தாண்டி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துள்ள அவர், தற்போது நடிகர் சல்மான் கானின் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மறுபுறம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. சினிமா பணிகளில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கும் இந்த தம்பதி, தங்களது இரட்டை குழந்தைகளுடன் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது 4-வது திருமண நாளை வாடிகனில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்ட அவர், திருமண நாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அதேபோல், அந்த புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாராவும் “நமக்கு திருமண நாள் வாழ்த்துகள்” என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

