தமிழில் ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பாலா, தொடர்ந்து ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, ‘மஞ்சள் வெயில்’, ‘வீரம்’, ‘தம்பி’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கேரளாவின் கோட்டயத்தில் வசித்து வரும் அவர், 2024-ஆம் ஆண்டு கோகிலாவை திருமணம் செய்துகொண்டார்.
பல ஆண்டுகளாக நடிகர் பாலாவின் குடும்ப பிரச்சினைகள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், “கடந்த 10 ஆண்டுகளாக என்னை சித்திரவதை செய்கிறார்கள். சட்டத்தின் பெயரில் ஒரு மனிதனை துன்புறுத்துகிறார்கள். எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேச வேண்டிய நிலை வந்தால், பெரிய செய்தியாளர் சந்திப்பு நடத்துவேன். உண்மைகள் வெளியானால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த பாலா, “நான் நல்லா இருக்கிறேன். நானும் என் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் சிலர் பழைய விஷயங்களை வைத்து தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள்” என்றார்.
மேலும், “நான் தீவிரவாதி அல்ல. பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். 8 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று புரியவில்லை. என் மனைவிக்கு ஒரு செயின் வாங்கிக் கொடுத்ததற்குக் கூட பிரச்சினை செய்கிறார்கள். ஆனாலும் நான் கோழை அல்ல… சட்டப்படி அனைத்தையும் சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார்.

