சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற Tamil Film Producers Council பொதுக்குழு கூட்டத்தில், சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் மே 2ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் ஒத்துழைக்காவிட்டால் தொடர்ச்சியான வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து South Indian Artistes’ Association வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண எப்போதும் இணைந்து செயல்பட்டுள்ள நிலையில், இத்தகைய தன்னிச்சையான முடிவு வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளது.
மேலும், திரைத்துறையில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேலைநிறுத்தத்தை தாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், இனியும் ஆதரிக்க மாட்டோம் என்றும் நடிகர் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. வருமானப் பகிர்வு முறை தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அல்லது பேச்சுவார்த்தை அழைப்பும் வரவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், நடிகர் சங்கத்தின் சட்ட விதிகளின்படி உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள், திரைத்துறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நடிகர் சங்கமே காரணம் என சித்தரிப்பது தவறானது என்றும், அவை உண்மையற்றவை எனில் தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக மறுப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாக, தமிழ் திரைத்துறையின் நலனுக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும், அதேபோல் மற்ற தரப்பினரிடமும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்த அறிவிப்பால் திரைப்பட படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பது, திரையுலகில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

