Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அரசியல் என்பது பொதுப்பணி”: நடிகர் விஷால் பேச்சு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். விரைவில் நடக்கவுள்ள பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இலக்கு என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து தனது 69-வது படத்திற்கு பிறகு திரைப்படங்களில் ஈடுபட போவதில்லை என்றும் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகை தர உள்ளதாக செய்தி பரவி வந்தது. இதைத்தொடர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா துறை மற்றும் பிற துறைகளைப் போல் அரசியல் என்பது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்குக்காக வந்துவிட்டுப் போகும் இடமும் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல்.

தமிழகத்தில் 2026-ல் தேர்தல் வருகிறது. நான் அரசியலுக்கு வருகிறேன், வரவில்லை என்று சொல்வதற்கோ, அல்லது மறைப்பதற்கோ எதுவுமில்லை. அதேபோல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கவும் மாட்டேன். அந்த நேரத்தில், அந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அதுதான்.

நான் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் ஆவேன் என்று நினைத்ததே கிடையாது. ராதாரவிக்கு போட்டியாக நிற்பேன் என்றும் நினைத்தது கிடையாது. இது எல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான். எனவே அதற்கான நேரத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால் சரியானதாக பதில் கிடைக்கும்” என்றார்.

Vishal latest speech Viral
Vishal latest speech Viral