Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – நடிகை விஜயசாந்தி விளக்கம்

Vijayashanti

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன. ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும். எனவே குழந்தைகள் நமக்கு வேண்டாம் என்று கணவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்.

அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. எங்கள் காலத்தில் காருக்குள் இருந்தே மேக்கப் போட்டு உடை மாற்றிக்கொள்வோம். குளிர்சாதன கார் தருவது இல்லை. படப்பிடிப்பில் காற்று வரவில்லை என்றால் ஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள். சரியாக தூக்கம் இருக்காது. அது மாதிரி கஷ்டம் இப்போதைய நடிகைகளுக்கு இல்லை. கேரவன் உள்ளிட்ட நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.”

இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.