பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
தமிழ் சினிமாவின் இரு பெரும் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சில நாட்கள் இடைவெளியில் மறைந்தது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977ஆம் ஆண்டு உதவி இயக்குநராக திரையுலகப் பயணத்தை தொடங்கிய பாக்யராஜ், நடிகர், இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர்.
மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா போன்ற திரைப்படங்கள் மூலம் 1980களில் தமிழ் சினிமாவில் வசூல் சாதனையை படைத்தார் பாக்யராஜ். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் இணைத்து சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவதில் அவர் தனித்துவம் பெற்றவர். இதனால் அவரை “திரைக்கதை மன்னன்” என்று ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.
முன்னாள் முதலமைச்சர் மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் இவரை தனது “திரையுலக வாரிசு” என்று புகழ்ந்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பாக்யராஜின் சினிமா பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவரின் சாதனைகளை பாராட்டினர்.
பாக்யராஜின் மறைவை அடுத்து, திரைத்துறையினர் பலரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கியமான திரைக்கதை ஆளுமை இன்று மறைந்தது திரையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

