தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953 ஜனவரி 7-ந்தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் பிறந்தவர். தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் சமூக கருத்துகளை இணைத்த திரைக்கதைகளால் இன்றும் ரசிகர்களால் மதிக்கப்படுகிறார்.
சினிமா பயணத்தின் தொடக்கத்தில், புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக தனது பணியை தொடங்கினார் பாக்யராஜ். 1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கிழக்கே போகும் ரெயில் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் சிறு வேடத்திலும் நடித்தார். பின்னர் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததோடு வசனமும் எழுதியது அவரது திறமையை வெளிப்படுத்தியது.
1979ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், அதே படத்தில் நடிகராகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அதன் பிறகு அவரின் இயக்கத்திலும் நடிப்பிலும் வந்த படங்கள் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கின.
அவர் இயக்கிய மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குடும்ப உணர்வும், நகைச்சுவையும், எதிர்பாராத திருப்பங்களும் அவரது படங்களின் அடையாளமாக அமைந்தன.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அவர் தன்னை விரிவுபடுத்தினார். இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்தார். பின்னர் பல்வேறு மொழிகளில் அவரது கதைகள் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டன.
தன் குருநாதரான பாரதிராஜா அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரு கைதியின் டைரி திரைப்படம் (இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார்) மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இந்தி பதிப்பான Aakri Raasta மூலம் பாக்யராஜ் இந்தி திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமானார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் நடித்திருந்த படம் அவசர போலீஸ் 100 என புதிய திரைக்கதையுடன் வெளிவந்ததும் அவரது படைப்பாற்றலை வெளிப்படுத்தியது.
பாக்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில், அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நடிகை பிரவீணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் மறைவுக்குப் பிறகு, நடிகை பூர்ணிமா ஜெயராம் அவர்களை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் சரண்யாவை பாரிஜாதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். மகன் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
திரைக்கதை மட்டுமல்லாமல் எழுத்துலகிலும் தனது முத்திரையைப் பதித்த பாக்யராஜ், பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்.
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பாணியில் “அடுத்த வீட்டுப் பையன்” போன்ற இயல்பான நடிப்பும், குடும்பக் கதைகளும், சமூக உணர்வும் கலந்த திரைக்கதைகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கே. பாக்யராஜ். இன்று வரை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

