சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார்.
ரஜினிகாந்தை முதன்முறையாக சந்திப்பதற்கு முன்பு மிகவும் பதற்றமாக இருந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ரஜினியை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவருடன் நடிப்பதற்கான ஒத்திகைக்கு முன்பே தன்னை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு இயக்குநர் ஷங்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும், தனது கோரிக்கையை கேட்டு ஷங்கர் சிரித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், ‘சிவாஜி’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் தன்னிடம் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் பழகியதாக ஸ்ரேயா கூறியுள்ளார். ஒரு முன்னணி நடிகர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல், தன்னுடன் நெருங்கிய நண்பரைப் போல பழகி, படப்பிடிப்பில் மிகவும் வசதியாக உணரச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததாகவும் ஸ்ரேயா குறிப்பிட்டுள்ளார். தனது ஆரம்ப காலத்தில் குறைந்த பணத்துடன் ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்து திரைப்படங்களை பார்த்த அனுபவங்களை ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த பிறகும் ரஜினிகாந்த் காட்டும் எளிமையும், தனது வேலையின் மீது அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது” என ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

