Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

Ashok Selvan’s Fun Take on Preity Mukhundhan

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதன் டீசர் மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இருவரும் பகிர்ந்துகொண்ட கலகலப்பான உரையாடல் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

பிரீத்தி முகுந்தன் பேசும்போது, “அசோக் செல்வன் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருப்பார். ஆனால் படப்பிடிப்புக்கு ஒரு நாள் செமையாக வருவார்; இன்னொரு நாள் ஏனோதானோ என்று வருவார்” எனக் கிண்டலாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த அசோக் செல்வன், “பிரீத்தி இதை படப்பிடிப்பு தளத்திலேயே என்னிடம் சொல்வார். என் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலை பார்த்துவிட்டு, ‘ச்சீ… தூ… இதெல்லாம் ஒரு ப்ரொஃபைலா? நீயெல்லாம் ஒரு ஆக்டரா? உனக்கெல்லாம் இன்ஸ்டாகிராம் தேவையா?’ என்று கூறி, எனது பதிவுகளை டெலிட் செய்யத் தொடங்கிவிட்டார்” என நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், “நாங்கள் இருவரும் மிகவும் ஜாலியான நண்பர்கள். பிரீத்தி எப்போதும் செல்போனில்தான் இருப்பார். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ChatGPT கூட அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்” என்றும் அசோக் செல்வன் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரீத்தி, “ஆக்டராக அசோக் ஜாலியாக இருப்பார். தயாரிப்பாளராக சீரியஸாக இருப்பார். அவ்வப்போது ‘அந்நியன்’ மாதிரி மாறிக்கொண்டே இருப்பார்” எனக் கூற, இருவரது கலகலப்பான உரையாடல் விழாவை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

கருணாமூர்த்தி அசோக் செல்வன் மற்றும் அபினயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.