Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

Saregama Seeks Action Against Ilaiyaraaja

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த பதிப்புரிமை தொடர்பான இடைக்காலத் தடையை மீறி, இளையராஜாவின் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘சரிகம’ தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை ‘சரிகம’ நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை உரிமை கொண்டாடவோ, பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 13ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரி இளையராஜா தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 1ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது. சம்பந்தப்பட்ட பாடல்களின் பதிப்புரிமையை திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து முறையாகப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை மீறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ‘சரிகம’ குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘சரிகம’ நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.